அனல்மின் நிலைய ஊழியர்களிடையே மோதல்- 6 வீடுகளுக்கு தீ வைப்பு: நெய்வேலி அருகே பதற்றம்
நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் நயினார்குப்பத்தில் ஆறு வீடுகளுக்கு தீ வைக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் புதிய அலகு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நயினார்குப்பம் மற்றும் பெரியகாப்பான்குளம் கிராமங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மிகுந்த பரபரப்பு உண்டானது.

இதையடுத்து நேற்று இரவு நயினார்குப்பத்தில் உள்ள 6 வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் நயினார்குப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இருதரப்பினருக்கும் இடையே எந்நேரமும் மீண்டும் மோதல் வெடிக்கக் கூடும் என்பதால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications