கூவத்தூரில் போய் கும்மாளம் போடுய்யா... நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வை தலைதெறிக்க விரட்டியடித்த பொதுமக்கள்!
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத நிலக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கூவத்தூரில் போய் கும்மாளம் போடுங்க என விரட்டியும் அடித்தனர்.
திண்டுக்கல்: குடிநீர் பிரச்சனையை தீர்க்காத நிலக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏ.வை சுற்றி வளைத்த பொதுமக்கள், போய் கூவத்தூரில் கும்மாளம் போடுங்கய்யா.. ஊரு பக்கம் வாங்க... நாங்க யாருன்னு காண்பிக்கிறோம் என மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்டது பெருமாள்கோவில்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கோரி வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உங்ககிட்ட எதுக்கு சொல்லனும்?
அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏ. தங்கதுரை, உங்க பிரச்சனையை என்னிடம் சொல்லுங்களேன் என கெஞ்சினார். ஆனால் கடுப்பாகிப் போன பொதுமக்கள், உங்களிடம் எதுக்கு சொல்லனும், அதிகாரிகளிடம் பேசுகிறோம் என எகிறியுள்ளனர்.
கூவத்தூருக்கு போங்க
அதேநேரத்தில் தங்கதுரை தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதில் உச்சகட்டமாக கடுப்பாகிப் போன பொதுமக்கள், போய் கூவத்தூரில் கும்மாளம் போட வேண்டியதானே இங்க எதுக்கு வந்தீங்க என காட்டமாக கூறியுள்ளனர்.
ஊரு பக்கம் வாங்க..
இதனால் அதிர்ச்சியடைந்த தங்கதுரை, அது எங்க கட்சி விவகாரம்... அதைபற்றியெல்லாம் பொதுமக்கள் நீங்க பேச கூடாது என கூறியுள்ளார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொதுமக்கள், நீங்க எங்க ஊரு பக்கம் வாங்க.. எங்க பவரை காட்டுறோம் என எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
மாதங்கள் உருண்டோடினாலும் கூவத்தூர் கூத்தை தமிழக மக்கள் மன்னிக்க தயாராக இல்லை என்பதைத்தான் நிலக்கோட்டை சம்பவம் வெளிப்படுத்துகிறது. இதனால் இன்னமும் பீதியில்தான் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர்.