பிரசவத்தின்போது இறக்கும் பெண்கள்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அதிகம்!
தஞ்சாவூர்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு அதிகமாக இருப்பதாக சுகாதார திட்ட இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் சிசு சிகிச்சை தொடர்பாக 8 மாவட்ட மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் தஞ்சையில் நடந்தது.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குனர் சண்முகம் தலைமை வகித்தார். தஞ்சை கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலம் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 90 என்று குறைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 128 ஆகும். தமிழகத்தில் கரூர், மதுரை, திருநெல்வேலி, தேனி, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் 90க்கும் அதிகமாக உள்ளது என்றார் அவர்.