அம்மா திரும்பிப் பார்த்தாலே 'ஸ்டைல்'தான்.. 'வணக்க்க்க்கம்' நிர்மலா பலே பேச்சு!
தஞ்சாவூர்: சிலருடைய பேச்சில் சரக்கே இருக்காது.. ஆனாலும் பேச்சின் ஸ்டைலும், சுவாரஸ்யமும் சேர்ந்து ரசிக்க வைத்து விடும்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நிர்மலா பெரியசாமி.
அவரேதான், வணக்க்க்க்க்ம் புகழ் நிர்மலா பெரியசாமி. இவர் இப்போது டிவி பிரபலம் மட்டுமல்ல, அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளரும் கூட. ஒரு காலத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தவர் நிர்மலா. ஆனால் காலம் அவரை அதிமுக பக்கம் கொண்டு போய் நிறுத்தி விட்டுப் போய் விட்டது.
இப்போது அதிமுக மேடைகளைக் கலக்க ஆரம்பித்திருக்கிறது வெண்கலத் தொண்டை கொண்ட நிர்மலாவின் குரல்.

இப்படித்தான் தஞ்சாவூரில் நடந்த அதிமுகவின் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தனது வழக்கமான பாணியில் வாய் நிறைய புன்னகை தவழ, டிவியில் பேசுவது போலவே நிறுத்தி நிதானமாக, இழுத்துப் பிடித்து அவர் பேசிய பேச்சைக் கேட்டு தொண்டர்கள் குஷியாகிப் போனார்கள். காரணம், அம்மாவை அவர் வர்ணித்த விதம் அப்படி.
நிர்மலா பேசுகையில், வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை மாற்றி தெற்கை வாழ வைப்பார் அம்மா. தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் அம்மாதான் ஆட்சி செய்வார்கள். அம்மாதான் பிரதமராக வேண்டும். இதைத்தான் நாங்கள் கோரி வருகிறோம்.
அம்மா பிரதமரானால் இலங்கை நம்மைப் பார்த்து பயந்து விடும். ஏன் ஒபாமாவே கூட அம்மா நானும் இந்தியா வந்து விடுகிறேன். எனக்கு இங்கேயே ஓட்டுரிமை தாருங்கள் என்று கேட்பார்.. என்று நிர்மலா கூறியபோது ... அடேங்கப்பா அப்படி ஒரு கைத்தட்டல்.
தொடர்ந்து பேசிய நிர்மலா, அம்மாவுக்கு 7 மொழிகள் தெரியும். அவர் பேசி விட்டுத் திரும்பி அப்படிப் பார்த்தாலே அது ஸ்டைல்தான். அவங்க அழகுக்கு ஈடாகுமா எதுவும்.. என்று மேலும் கூற கூட்டத்தில் விசில் பறந்தது.
நியாயப்படியும், தர்மப்படியும் பார்த்தால் நிச்சயம் நிர்மலாவுக்குத்தான் ராஜ்யசபா சீட் தந்திருக்க வேண்டும் ஜெயலலிதா... ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சே.












Click it and Unblock the Notifications