என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 3 வதுநாளாக தொடர்கிறது... முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னை: ஊதிய மாற்று ஒப்பந்தம், தொழிலாளர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்று நீடிக்கிறது. என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னை சாஸ்திரி பவனில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் திங்கட்கிழமை இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நேற்று நிரந்தர தொழிலாளர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் இல்லத்தில் இருந்து பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இதனிடையே இன்று சென்னை சாஸ்திரி பவனில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications