மாணவியுடன் காணாமல் போன சேலம் தமிழ் ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: 10ம் வகுப்பு மாணவியுடன் காதலாகி, தலைமறைவு வாழ்க்கை நடத்திய தமிழாசிரியருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும் தமிழ்க கலாச்சாரம் குறித்து நன்கு தெரிந்திருந்தும், மாணவிக்குக் காப்பாளராக இருக்க வேண்டிய ஆசிரியரே அவரை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதை ஏற்கவே முடியாது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது தமிழாசிரியர் ஒருவர், தனது பள்ளியில் 10வது வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
பல நாட்கள் இருவரும் பல்வேறு ஊர்களுக்குப் போயுள்ளனர். லாட்ஜுகளில் தங்கியுள்ளனர். உடல் ரீதியான உறவிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மகளைக் காணாமல் அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். போலீஸாரும் தேடி வந்தனர்.
இதற்கிடையே, பல நாள் தலைமறைவுக்குப் பின்னர் மாணவியை அவரது ஊரில் கொண்டு வந்து விட்டு விட்டு ஆசிரியர் மீண்டும் ஓடிப் போய் விட்டார்.
மேலும் போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார்.
அதில் நான் அந்த மாணவியை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தினேன் என்று கூறுவது தவறாகும். அந்த மாணவியே தனது பெற்றோருடன் போக விரும்பவில்லை என்று உள்ளூர் கோர்ட்டில் கூறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நாகமுத்து, ஒரு ஆசிரியர், அதிலும் தமிழாசிரியர், தமிழ்க் கலாச்சாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மாணவிக்கு காவலராக இருந்திருக்க வேண்டிய அவரே பாலியல் ரீதியாக அவரைப் பயன்படுத்தியிருப்பதை ஏற்கவே முடியாது.
மாணவி தனது பெற்றோருடன் போக விரும்பவில்லை என்று கூறுவதை தான் செய்த குற்றத்தை மறைக்க பயன்படுத்த முடியாது என்று கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications