தமிழகத்தை ‘சாதிப் பேய்’ பிடித்துள்ளது... முப்பெரும் விழாவில் கருணாநிதி வேதனை
சென்னை: தமிழகத்தில் ஜனநாயகம் தோற்று, பணநாயகம் வெல்லும் காலம் நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுகத் தலைவர் கருணாநிதி, தமிழகத்தை சாதிப்பேய் பிடித்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தந்தை பெரியாரின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தி.மு.க.வின் பிறந்தநாள் என 3 விழாக்களையும் சேர்த்து முப்பெரும் விழாவாக தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ், பண முடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மேலும், பெங்களூரைச் சேர்ந்த வி.டி.சண்முகத்திற்கு பெரியார் விருதையும், முனவர் ஜானுக்கு அண்ணா விருதையும், புதுக்கோட்டை விஜயாவுக்கு பாவேந்தர் விருதையும், நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-
விருதுக்கான காரணம்...
இங்கு விருதுபெற்றவர்களை வாழ்த்தும்போது, இந்த இயக்கத்துக்காக உழைத்தவர்கள் என்று மக்களுக்கு காட்டி, இன்னும் பலர் இதுபோல் உருவாக வேண்டும் என வழங்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இங்கு பேசும்போது, இந்த இயக்கத்தை வழிநடத்த எல்லோரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார்.
உடல் நலப் பாதிப்பு...
சமீபகாலமாக நம்முடைய கூட்டங்களில் நீண்டநேரம் பேசும் சூழ்நிலை எனக்கு இல்லை. அதற்கு உடல்நலம் இடம்தரவில்லை. ஆனாலும், உடல்நலத்துடன் போட்டிப்போட்டுக் கொண்டு முடிந்தவரை பேசி வருகிறேன்.
சங்கடமான தருணம்...
நாட்டு மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்படவேண்டுமென்று தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், நாம் உணர்ச்சி மூட்டியதால் மக்கள் எழுச்சி பெற்றார்களா? என்று பார்த்தால், அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், இந்த முப்பெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், மனதிற்கு சங்கடமாக இருக்கிறது.
திமுகவின் நோக்கம்...
அரும்பாடுபட்டு பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோர் உழைத்து உருக்குலைந்துபோன மக்களை காப்பாற்ற கூறியது எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது?. சமுதாயத்தில் மக்களை தட்டிஎழுப்ப நாம் உழைத்த உழைப்பும் பயன்பட்டதா? என்று எண்ணிப்பார்க்கும்போது, பெருமைக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. சாதியின் பெயரால் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்ற நிலையை உருவாக்க இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது.
சாதிப்பேய்...
ஆனாலும், சாதிப்பேய் பிடித்து ஆட்டிக் கொண்டுதான் இருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என்று இன்னும் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனவே, இன்னமும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறோம். சமுதாயத்துக்காக எங்கள் உழைப்பு போதாது. எனவே, எங்கள் உழைப்பை தொடர்ந்து, இளைஞர்கள் உழைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடு வாழ முடியும்.
சூளுரை...
தி.மு.க. இங்கு முப்பெரும் விழா கொண்டாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நீங்கள் எல்லோரும் சூளுரை ஒன்றை ஏற்கவேண்டும். தமிழர்களாக வாழ்வோம், தமிழ்மொழியை காப்போம் என்ற சூளுரையை ஏற்கவேண்டும். இந்த கழகத்தை நீங்கள் எல்லோரும் வெற்றிபெற செய்யவேண்டும்.
பணநாயகம்...
அப்படியென்றால், நான் இந்த இடத்தில் தேர்தலை குறிப்பிடவில்லை. தேர்தலில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. ஜனநாயகம் தோற்று, பணநாயகம் வெல்லும் காலம் நிலவுகிறது. எனவே, ஜனநாயகத்தை காக்க, பணநாயகத்தை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.