ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை.. வாய்ப்பூட்டு போட்ட நிர்வாகி!
ரஜினி ரசிகர்மன்றத்தை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்றும் டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்றும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: ரஜினி ரசிகர்மன்றத்தை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு அனுமதியின்றி பேட்டியளிக்கக் கூடாது என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அரசியலுக்கு வருவதாக ரஜினி நேரடியாக சொல்லவில்லை என்றாலும் கூட நாம் தமிழர் கட்சியினர் தமிழர் முன்னேற்றப் படையினர், தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கண்ட அமைப்புகளுக்கு எதிராக ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கட்சித் தலைவர்களின் படங்களை எரிக்க முயன்றனர். இதேபோல் ரஜினி ரசிகர்களும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மன்ற விதிகளை மீறும் ரசிகர்களை நீக்க நிர்வாகி சுதாகரனுக்கு அதிகாரம் உள்ளது என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
அவருடன் வருங்காலத்தில் ரசிகர்கள் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஊடகங்களுக்கு அனுமதியின்றி பேட்டியளிக்க கூடாது. அதேபோல் டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.