கள்ளக்குறிச்சியில் கதறியபடி பெண் சொன்ன ஒற்றை வார்த்தை.. அப்படியே ஒரு நிமிடம் கண்கலங்கிய எடப்பாடி
கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து, எங்களுக்கு இலவச அரிசி எல்லாம் வேண்டாம்.. இந்த சாராய கடையை மட்டும் இல்லாமல் ஆக்குங்க.. எங்களுக்கு இலவசமே வேண்டாம் ஐயா.. என்று கதறி அழுதனர். இதனை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமியும் ஒரு நிமிடம் கண் கலங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் பலியாகினர். கள்ளக்குறிச்சியில் தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் மரண ஓலமே கேட்கிறது. இந்த நிலையில் இன்று காலை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.
அங்கு விஷச்சாராயம் குடித்ததில் உயிரிந்தவரின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதுக்கொண்டிருந்தனர். இதில், அங்கிருந்த பெண்கள் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து, எங்களுக்கு இலவச அரிசி எல்லாம் வேண்டாம்.. இந்த சாராய கடையை மட்டும் இல்லாமல் ஆக்குங்க.. எங்களுக்கு இலவசமே வேண்டாம்.. மதுக்கடையை மூடுங்க ஐயா.. என்று கதறி அழுதனர். இதனை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமியும் கண் கலங்கினார்.
இதனை தொடந்து எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்து இருப்பது மன வேதனை அளிக்கிறது. மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இவர்கள் அனைவரும் ஏழைகள். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்ட பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதி. இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்திற்கு அருகே தான் காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. அதோடு மாவட்ட காவல் கண்காளிப்பாளர் இங்கே இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இப்படி பகுதியில், இவ்வளவு அதிகாரிகள் இருக்கின்ற மாவட்ட தலைநகரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த தகவல் படி, இதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications