பாஜக - அதிமுக இடையே எவ்வித மறைமுக உறவும் இல்லை - இல.கணேசன் சுளீர் பேட்டி
வேலூர்: அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் சட்டசபைத் தொகுதி பாஜக சிறப்பு ஆய்வுக்கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இல.கணேசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை அரசியல் ஆக்கக் கூடாது.
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அதனை இலங்கைக்குக் கொடுத்தார். அதற்கு பாஜக அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் தமிழக மீனவர்களுக்கு எத்தகைய வசதிகள் கிடைக்குமோ அத்தனையையும் பெற்றுத் தர பாஜக தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்க இலங்கை அரசும் தயாராக உள்ளது.
இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடிப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் நமது மீனவர்கள் இரட்டை மடிப்பு வலையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு இதுவரை தமிழக மீனவர்கள் ஒருவர்கூட இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய பாஜக கூட்டணியே தொடரும். மக்கள் நலக் கூட்டணி ஒரு பொருத்தமல்லாத கூட்டணி. தேர்தலில் வெற்றி பெறாததால் அதன் கூட்டணிக் கட்சிகள் தானாகப் பிரிந்துவிடுவது இயற்கையே என்றார்.












Click it and Unblock the Notifications