ரத்தன் பண்டிட் தவெக செய்தித் தொடர்பாளர்.. ஜோதிடராக இருப்பதால் பிரச்சினையில்லை.. விஜய்யை சந்தித்த பின் திருமா பேச்சு
சென்னை: முதல்வர் விஜய் நேற்றைப் போலவே இன்றும் அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். விசிக தலைவர் தொல் திருமாவளவனை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். பிறகு பேசிய திருமாவளவன், ”ரத்தன் பண்டிட் தவெக செய்தித் தொடர்பாளர்.. ஜோதிடராக இருப்பதால் பிரச்சினையில்லை.. ஜோசியம் வேறு.. மதவாதம் வேறு” என கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக விஜய்யின் ஜோதிடருடம், தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். ஜோதிடர் ஒருவர் அரசியல் பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதை பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

விசிக ரவிக்குமாரும் இதனை விமர்சித்து இருந்த நிலையில், தொல் திருமாவளவன் ரத்தன் பண்டிட் தவெக செய்தித் தொடர்பாளர்.. ஜோதிடராக இருப்பதால் பிரச்சினையில்லை என்று கூறினார். இன்று மாலை முதல்வர் விஜய் விசிக தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்தார். அப்போது விஜய்யை வாசலுக்கே சென்று வரவேற்ற திருமாவளவன், அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பரிசாக வழங்கினார்.
திருமாவளவன் கருத்து
அங்கு திருமாவளவன் உடன் எம்எல்ஏ வன்னியரசு, சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் விஜய்யை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தார் திருமாவளவன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "விஜய்யின் அரசியல் நாகரீகத்தின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. விஜய் என்.டி.ஏ கூட்டணி ஆதரவை கோரவில்லை.
எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்குமாறு கேட்டிருக்கிறேன்.. அவரும் சந்திக்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்" என்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் ரத்தன் பண்டிட்டிற்கு பொறுப்பு வழங்கியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன், ரத்தன் பண்டிட் ஏற்கனவே தவெகவில் பொறுப்பில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
ஜோசியம் வேறு.. மதவாதம் வேறு..
தவெகவின் செய்தித் தொடர்பாளர் என்ற வகையில் தான் ஜோசியர் ரத்தன் பண்டிட்டிற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவர் ஜோசியமும் பார்க்கக் கூடியவராக இருக்கலாம். ஆனால் கட்சியில் அவர் பொறுப்பில் இருப்பதனால் இந்த பொறுப்பானது வழங்கப்பட்டிருக்கலாம்.
ஜோசியத்தை நம்புவது வேறு.. மதவாதத்தில் ஈடுபடுவது என்பது வேறு.. ஜோதிடத்தை நம்புகிறவர்கள் எல்லாம் மத அரசியலை வெறுப்பு அரசியலை பேசுவதில்லை. அவர் ஜோதிடர்.. அதே நேரம் அவர் அக்கட்சியில் செய்தித் தொடர்பாளர். எனவே பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் என கருதுகிறேன்" என்று பதில் அளித்தார்.
அரசியல் தலைவர்களை சந்திக்கும் விஜய்
தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தலைமை செயலகம் சென்றார். பின்னர் பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் விஜய் கி வீரமணியை சந்தித்து பேசினார். இதன்பிறகு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான், வைகோ உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார். நேற்றைப் போலவே இன்றும் விஜய் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் சென்ற விஜய் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவனை விஜய் சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications