செல்போன் அழைப்பு, சிசிடிவி காட்சிகள்.. சுவாதி கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன?
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்த கொலையாளி குறித்து துப்பு கிடைத்துள்ளதாக காவல்துறை முதலில் கூறிவந்த நிலையில், மேலதிக தகவல் கிடைக்காமல் இன்னமும் குற்றவாளியை நெருங்க முடியாமல் கை பிசைந்தபடி உள்ளது போலீஸ்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், கொலையாளியின் உருவ படம் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
வீடியோ இல்லை
ரயில் நிலையத்தில் இருந்த பிற பயணிகள் யாருமே கொலை சம்பவத்தையோ, கொலையாளி நடந்து செல்லும்போதோ செல்போனில் போட்டோ அல்லது வீடியோ எடுக்கவில்லை. இதனால் போலீசாருக்கு கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
பக்கத்து வீடு
ரயில் நிலையம் அருகேயுள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
மர்ம நபர்
முதுகில் பேக் அணிந்திருந்த நபர்தான் கொலையாளி என, ரயில் நிலையத்தில் கடை வைத்திருந்தவர்கள் போலீசாரிடம் கூறிய தகவல் அடிப்படையில், சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள, முதுகில் பேக் அணிந்து செல்லும் நபரை போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பதற்றம் இல்லை
இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள நபர் எந்த பதற்றமும் இன்றி நடந்து செல்கிறார். குறைந்தபட்சம் தன்னை பின்னால் யாராவது துரத்தி வருகிறார்களா என்பதை கூட திரும்பி பார்க்காமல் நடந்து செல்கிறார். எனவே இவர் கொலையாளியாக இருக்குமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.
தொலைபேசி அழைப்புகள்
இதனிடையே சம்பவம் நடைபெற்ற நேரத்திற்கு முன்னும், பின்னும், ரயில் நிலையத்தின் அருகேயுள்ள செல்போன் கோபுரங்களில் பதிவான தொலைபேசி உரையாடல்களுக்குரிய எண்கள் அனைத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். கொலை நடந்த பிறகு கொலையாளி, செல் போனில் பேசியபடியே தண்டவாளத்தை தாண்டி குதித்து ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதால், செல்போன் நம்பர்களை சேகரிக்கிறது போலீஸ்.
கருப்பு பேண்ட்
ரயில் நிலையம் அருகே கிடைத்த காமிரா காட்சியில், கொலையாளி கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளதுதான் தெரியவந்தது. அவனது சட்டை நிறம் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு சற்று தூரத்திலுள்ள வீட்டிலுள்ள சிசிடிவி காமிராவில்தான் முழு உருவம் தெரிகிறது. எனவே இருவரும் ஒரே நபரா என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
வேண்டுகோள்
இதனிடையே, கொலையாளியின் புகைப்படத்தை எந்த ரயில் பயணியாவது எடுத்திருந்தால் அதை வெளிப்படுத்துமாறு சுவாதியின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.