நெடுவாசலுக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை.. ஒரே போடாக போடும் ஓஎன்ஜிசி!
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓ.என்.ஜி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: நெடுவாசலுக்கும், ஓஎன்ஜிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓஎன்ஜிசி விளக்கம் அளித்துள்ளது. தவறான செய்தி விவசாயிகளிடம் பரப்பப்பட்டு வருவதால் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை நெடுவாசல், கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தங்களுக்கும் நெடுவாசலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்துள்ள்து.
மேலும், தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. திட்டத்தில் ஷேல் வாயுவோ, மீத்தேன் எரிவாயுவோ எடுக்கப்படவில்லை என்றும் ஓ.என்.ஜி.சி. கடந்த 50 ஆண்டாக காவிரி டெல்டா பகுதிகளில் செயல்பட்ட போதிலும் விவசாயம் பாதிக்கபடவில்லை என்றும் கூறியுள்ளது.
ஓ.என்.ஜி.சி மூலம் தினமும் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும், அதனால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ள ஓ.என்.ஜி.சி, பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்து விளக்கம் கொடுக்கவே அறிக்கை வெளியிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.