என்னது காங்கிரசில் மீண்டும் சேரப் போகிறேனா...நெவர்... நடக்காது.... ஜி.கே.வாசன் திட்டவட்டம்
திருவாரூர்: தாம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரப் போவதாக வெளியான செய்திகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது தமாகா. இந்த கூட்டணி அமைந்தது முதலே தமாகா சிதறிப் போனது.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமாகாவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிமுகவுக்கு தாவினர்... காங்கிரஸுக்கே திரும்பினர். இது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் தனித்துவிடப்பட்ட ஜி.கே.வாசன், தமாகாவை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்காக டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தாம் காங்கிரஸுக்கு மீண்டும் திரும்பப் போவது இல்லை; ஒருபோதும் காங்கிரஸ் கட்சியில் சேரவே மாட்டேன் என் திட்டவட்டமாக கூறியுள்ளார் வாசன். இது தொடர்பாக வாசன் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் தமிழ்மாநில காங்கிரஸ்தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும்.
டெல்லி, மும்பை என்று பல மாநிலங்களுக்கு செல்வேன். அதற்காக கற்பனையான வதந்திகளை பரப்புவது ஏற்கத்தக்கதல்ல.
நாங்கள் காங்கிரசை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
உயிரோட்டமுள்ள முன்னணி இயக்கமாக த.மா.கா உருவாகி கொண்டிருக்கிறது. மீண்டும் காங்கிரசில் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.