தினகரன் கோஷ்டியின் நாரதர் வேலைகள்- ஓபிஸ், எடப்பாடி கோஷ்டி பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை?
தினகரன் கோஷ்டியின் நாரதர் வேலைகளால் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
சென்னை: தினகரன் கோஷ்டி உருவாக்கும் குழப்பங்களால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகளின் இணைப்பு பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பு இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் திடீரென இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. இந்த இணைப்பு பேச்சு தொடங்கியது போல இருதரப்பிலும் மாறி மாறி ஏகப்பட்ட முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருகட்டத்தில் இந்த பேச்சுவார்த்தையே நடக்காது என்ற நிலை உருவானது. அப்போது ஓபிஎஸ் கோஷ்டி, ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் என்கிற இரு நிபந்தனைகளை முன்வைத்தது.

பேச்சு குழுக்கள்
இதற்கு தடாலடியாக பதிலளிக்காமல் பவ்யம் காட்டியது எடப்பாடி கோஷ்டி. இதன்பின்னர் இரு கோஷ்டிகளும் பேச்சுவார்த்தைக்காக குழுக்கள் அமைத்து எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தன.

தினகரன் கோஷ்டி நாரதர் வேலை
தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக பேச்சுவார்த்தை நடக்காது என்கிற நிலை உருவாகி உள்ளது. எடப்பாடி கோஷ்டியில் இணைப்பை விரும்பாத தினகரன் கோஷ்டி தங்கதமிழ்ச்செல்வன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஆளுக்கு ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

நமது எம்ஜிஆர்
இதன் உச்சமாக தினகரன் கோஷ்டியின் நமது எம்ஜிஆர் பத்திரிகையோ, சசிகலா- தினகரன் பின்னால் செல்வோம் என குறுக்குசால் ஓட்டியது. இதில் ஓபிஎஸ் கோஷ்டி கடும் அதிருப்தி அடைய பேச்சுவார்த்தையே நடக்காது என்கிற அளவுக்கு காட்டமாக முனுசாமி பேட்டி கொடுத்தார்.

பேச்சு நடக்குமா?
இந்த பேட்டிக்குப் பின்னரும் கூட எடப்பாடி கோஷ்டி, பேச்சுவார்த்தைக்கு வாங்க என்று பவ்யம் காட்டுகிறது. ஆனால் தினகரன் கோஷ்டி இந்த பேச்சுவார்த்தையை ஒழித்துக் கட்டுவதில் கங்கணம் கட்டுகிறது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்பது கேள்விக் குறிதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications