ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய பதவிக்காலத்தை நீட்டிக்க கூடாது: ஹைகோர்ட் அதிரடி!
ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதேபோல் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் பலர் காயமடைந்தனர், இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விசாரணை கமிஷன்களுக்கு கால அவகாசம் அளிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நியாயமான காலஅவகாசம் மட்டுமே வழங்கவேண்டும் என ஹைகோர்ட் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.