ஜெ. உடல்நிலையில் முன்னேற்றம்... இடைக்கால முதல்வர் தேவையே இல்லை: பொன்னையன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூறியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அதிமுக நிராகரிப்பு
இதனால் முக்கிய முடிவுகளை எடுக்க தற்காலிக முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை அதிமுக நிராகரித்துள்ளது.
அரசு நிர்வாகம்..
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன் இது தொடர்பாக கூறியதாவது:
தமிழகத்தில் அரசு நிர்வாகம் முறையாக செயல்பட்டு வருகிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு உள்ளது.
இடைக்கால முதல்வர்...
அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்றைய நிலையில் இடைக்கால முதல்வர் தேவை இல்லை.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறி வருவது அவரது சொந்த கருத்து. தமிழகத்தில் அரசு நிர்வாகம் தங்கு தடையின்றி செயல்படுகிறது. ஆகையால் ஜனாதிபதி ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்பது தேவையில்லாதது.












Click it and Unblock the Notifications