உசுப்பேற்றிய மாஃபா பாண்டியராஜன்.. ஒன்னுமில்லாமல் போன ஓ.பி.எஸ் பிரஸ் மீட்!
ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைக்கும் முடிவை அறிவிப்பார் என்று கூறியதன் பேரில் வரலாற்றையே ஏமாற்றியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று ஆர்.கே. நகரில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் அறிவிக்காததால் அவரது ஆதரவாளர்களும், மக்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டில் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிறந்தநாள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வரலாற்றையே திரும்பி பார்க்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.
இதனால் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும் சசி தரப்போ பன்னீர் என்ன குண்டை போட போகிறாரோ என்று பீதியில் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடிய ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களா சந்தித்து, வழக்கம் போல் தர்மம் வெல்லும், சூது கவ்வும் உள்ளிட்ட தமிழ் பட டைட்டில்களையே கூறியிருந்தார்.
இதனால் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடக செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஏமாற்றமே விஞ்சியது.