பெருந்துறை சிப்காட்டில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கருப்பணன்
பெருந்துறை சிப்காட்டில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் வளாகத்தில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அதிக அளவில் இருக்கும் தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மாசு அதிகரித்து இருப்பதால் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினருடன் அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், இப்பகுதியில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவு நீரை வெளியேற்ற உறுதி அளித்துள்ளனர். இன்னும் 2 மாதங்களுக்குள் அதற்கான வழிமுறைகள் முழுவதுமாக மேற்கொள்ளப்படும். சிப்காட் வளாகத்தில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications