ஜெ.வும் கூட தூர்வாரவில்லை... போகிற போக்கில் போட்டுத் தாக்கிய எடப்பாடியார்
மேட்டூர் அணையை இதுவரை யாரும் தூர்வாரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவதை பார்த்தால் அவரது தலைவி ஜெயலலிதாவையும் சேர்த்துதான் சொல்கிறாரோ என்று தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.
சேலம்: மேட்டூர் அணையை இதுவரை யாரும் தூர்வாரவில்லை என்று ஜெயலலிதாவையும் சேர்த்துதான் முதல்வர் பழனிச்சாமி கூறுகிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வறட்சியை கருத்தில் கொண்டு நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மாநில அரசு செய்து வருகிறது. இந்நிலையில் 83 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நீராதாரமான மேட்டூர் அணையை முதல் முறையாக தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
ரூ. 100 கோடி செலவில் 1519 ஏரிகள் முதல் கட்டமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட பணிகள் நடைபெற்றவுடன் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.
வண்டல் மண் இலவசம்
அப்போது அவர் பேசுகையில், இயற்கை இடையூறு அளிக்காத பட்சத்தில் இந்த தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். அதில் கிடைக்கு்ம வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
பொன். ராதாவுக்கு பதில்
மேட்டூர் அணி உள்பட அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரும் நடவடிக்கையை வரவேற்புதாக தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் இதில் பிரயோஜனம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை யாரும் தூர்வாரவில்லை. இந்த அரசுதான் அந்த பணியை செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
ஜெ. ஆட்சி
தமிழகத்தை மாறி மாறி ஆண்டதே திமுகவும், அதிமுகவும்தான். தமிழகத்தில் கடந்த 2015-இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார். இதுவரை தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்துள்ளது.
தொண்டர்கள் அதிருப்தி
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கூறிய கருத்தை ஆராய்ந்தோமேயானால் தூர்வாரும் பணிகளை ஜெயலலிதாகூட முன்னெடுக்கவில்லை என்றும் தான்தான் முன்னின்று நடத்துகிறேன் என்றும் எடப்பாடி கூறுவதை போல் உள்ளதாக தொண்டர்கள் யோசிக்கின்றனர். இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.