வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு அரசு தடை
சென்னை: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ள சித்திரைத் திருவிழாவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சித்திரைத் திருவிழாவுக்கு அனுமதி தரக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ‘இந்திய மக்கள் மன்றம்' அமைப்பைச் சேர்ந்த வாராகி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரலில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவுக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி காவல்துறையிடம் மனு அளித்திருந்தேன். எனினும் பல நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் அந்த நிபந்தனைகளை கடைபிடிக்காமல் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். அதன் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த ஆண்டு, வரும் மே 15-ம் தேதி சித்திரைத் திருவிழா நடத்த வன்னியர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அனுமதி அளித்தால் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடக்கக் கூடும். எனவே, அனுமதி வழங்கக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் வாராகி குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, சித்திரை திருவிழா நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும், எனவே சித்திரை திருவிழாவிற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications