அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை- ராஜேஷ் லக்கானி பதில் மனு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது என்ற கூற்று தவறானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக வாக்காளர் இறுதி பட்டியலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியலை, தி.மு.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மத்திய அரசு அதிகாரிகளை கொண்டு சரிபார்க்க தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வாக்காளர் இறுதி பட்டியலை செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று இறந்தவர்களின் பெயர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக கூறினார். இந்த நடவடிக்கைகளின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்தாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்டது தொடர்பாக அதிகாரிகள் சிலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்றும் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கை முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி ஆர்.சுப்பையா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications