உடல்நலக் குறைவு- வேலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் பேரறிவாளன்!
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் உடல்நலக் குறைவின் காரணமாக உயர் சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும், அவருக்கு சென்னையில் சிகிச்சையில் அளிக்க வேண்டும் என்றும் அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். உடல்நிலை சரியில்லாத பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த புதன்கிழமை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் பேசிய அற்புதம்மாள், "பேரறிவாளன் நோயின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றார். அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனினும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை. எனவே பேரறிவாளனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மனு அளித்துள்ளார். பேரறிவாளன் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அற்புதம்மாள் கோரிக்கையின் அடிப்படையில் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications