நாங்கள் சட்டசபைக்குள் நுழைவதை யாரலும் தடுக்க முடியாது: தேமுதிக கொறடா சந்திரகுமார்
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகும், தங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து சலுகைகளும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்று தேமுதிக சட்டசபை கொறடா சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வோம். அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடந்த விவாதத்தின்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் அனை வரும் ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பினர். எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி கோஷம் எழுப்பியபடி சென்றனர். இச் சம்பவத்தையடுத்து சட்டசபையில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதுடன், 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இப்பிரச்சினை சட்டசபையின் உரிமைக் குழுவுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில், தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய 6 பேர் சட்டசபையின் அப்போதைய தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த காலகட்டத்தில் அவர்களது சம்பளம் மற்றும் இதர படிகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை எதிர்த்து 6 எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சபாநாயகர் விதித்து இருந்த தடையை ரத்து செய்து 6 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை கூட உள்ள நிலையில், அதில் பங்கேற்க அனுமதிக்க கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.
தேமுதிக சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அலுவலகம் வந்தனர். 6 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை ஜமாலுதீன் அலுவலகத்தில் அளித்த எம்.எல்.ஏ.க்கள், செவ்வாய்கிழமையன்று தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், தமிழக சபாநாயகர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் மீது எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்றம் கடந்த 12ம் தேதி ரத்து செய்தது. அதன்பிறகும் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் அலுவலகம், சட்டசபை விடுதி அறை இதுவரை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், நாளை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் தே.மு.தி.க. உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்தும் எவ்வித தற்காப்பும் மேலும் சட்டசபை உறுப்பினர்களின் பலன்கள், சலுகைகள் குறித்தும் எவ்வித தகவலையும் சட்டசபை செயலாளர் தெரிவிக்கவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்டு இத்தனை நாட்கள் ஆகியும் சலுகைகளை திரும்ப கொடுக்காமலும், அலுவலகங்களை திறக்காமலும் இருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.
எனவே இதுபற்றி செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அந்த கடிதத்துடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் இணைத்து கொடுத்து இருக்கிறோம். நாங்கள் நாளை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வோம். அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரை சபாநாயகர் அனுமதிப்பாரா?












Click it and Unblock the Notifications