ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு!!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாளாகும். அத்தொகுதியில் வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவர் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க., பா.ம.க., த.மா.கா., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புறக்கணித்து விட்டன. தேமுதிக, பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறதா அல்லது தேர்தலை புறக்கணிக்கிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க.வும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுவது என்றும், அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாள் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
4 ஆம் தேதி 2வது நாள் ஒரு வேட்பாளர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. 5 ஆம் தேதி அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக மாற்று வேட்பாளராக மதுசூதனன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
6 ஆம் தேதி தமிழ் மாநில கட்சி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்,
நேற்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, நேற்று மாலை வரை 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா தவிர மற்ற 26 பேரும் சுயேச்சை வேட்பாளர்களாவர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நாளை (10ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 11 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 13 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வருகிற 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 30 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications