கேப்டனும், வாசனும் ம.ந.கூ.வில் இருந்து போனால் போகட்டும், அவர்களை யாரும் சேர்த்துக்க மாட்டாங்க: வைகோ
சென்னை: விஜயகாந்தும், ஜி.கே. வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும். அவர்களை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

கட்சி
கட்சி என்றால் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள். இது எல்லாம் சகஜம். அதனால் அதை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி இன்னும் அப்படியே தான் உள்ளது.

ம.ந.கூ.
தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணியில் நீடித்து இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நம் எண்ணப்படி இல்லை. அவர்கள் போனால் போகட்டும். அவர்களுடன் எந்த கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளாது.

விஜயகாந்த்
துவக்கத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி அப்படியே உள்ளது. கூட்டணி அமைந்த பிறகு வந்து சேர்ந்தவர்கள் தான் விஜயகாந்தும், வாசனும். மக்கள் நலக் கூட்டணியோடு உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் கணிசமாக இடங்களை பெறுவோம் என்று வைகோ தெரிவித்தார்.

தேமுதிக
தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் முதலில் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறுமாறு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மனம் மகிழும் வகையில் முக்கிய முடிவு எடுப்பதாக அவரும் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இனியும் தொடர்வதா என்ற யோசனையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications