தென் மாவட்டங்களில் கனமழை… வடகிழக்குப் பருவமழை தாமதம்… ரமணன் தகவல்
சென்னை: வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி காரணதாக அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று அதிக பட்சமாக விருதுநகர் மாவட்டம் வந்திராய் இருப்பு மற்றும் பொள்ளாச்சியில் 10 செ.மீ மழையும், தங்கச்சி மடம் 9 செ.மீ, சிவகாசி, பாம்பன் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கை மீது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது'' என்றார். வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார் ரமணன்.












Click it and Unblock the Notifications