வானிலை ஆய்வு மையம் சொன்னா மாதிரியே அக். 30க்கு வடகிழக்கு பருவமழை வந்துடுச்சி.. மக்கள் 'மகிழ்ச்சி'
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போன்று அக். 30ம் தேதி சரியாக சென்னை உள்ளிட்ட பகுதிக்களில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
சென்னை: கியான் புயல் உருவானதை அடுத்து அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போன்று நேற்றிரவு தமிழகத்தில் மழைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 27ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்ததால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை விலகிவிட்டதாகவும், இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் கியான் புயல் உருவானதாலும் மழைப் பெய்ய வாய்ப்பு உருவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அவர் சொன்னது போன்று சென்னையில் நேற்றிரவு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, சாலையில் ஆங்காங்கே நீர் தேங்கி நின்றது.
இன்று காலையில் இருந்து முதல் கோயம்பேடு, அண்ணாநகர், என்.எஸ்.கே. நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த முறை போன்று வெள்ளம் ஏற்படுமானால் முறையான பாதுகாப்பு வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications