திண்டுக்கல் ம.ந.கூ. பொதுக் கூட்டம்.... அப்படி ஒன்னும் எழுச்சி....பேராதரவு தெரியலையே....
திண்டுக்கல்: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணிக்கு பேராதரவு கிடைத்து வருகிறது என்று அதன் தலைவர்கள் என்னதான் கூறிவந்தாலும் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற அதன் பொதுக்கூட்டத்தை பார்த்த போது 'அப்படி' ஒன்றும் எழுச்சியாக இல்லையே... 4 கட்சி சேர்ந்தும் இவ்வளவுதான் கூட்டமா? என்ற கேள்விதான் இயல்பாக எழுந்தது.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இந்த 4 கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதமும் மிக அதிகபட்சமாக 8%. இருப்பினும் மாற்றத்தை விரும்பும் புதிய வாக்காளர்கள் அத்தனை பேரும் எங்களையே ஆதரிப்பார்கள்; ஆகையால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று பேசி வருகின்றனர் இந்த தலைவர்கள்.

மக்கள் நலக் கூட்டணியின் மதுரை பொதுக் கூட்டத்துக்கு "மக்கள் படையெடுத்து'' வந்ததே மாற்றத்துக்கான முதல் வெற்றி என்றெல்லாம் தொடர்ந்தும் பேசிவருகின்றனர் இவர்கள். தற்போது தமிழகம் முழுவதும் வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையை பார்த்தீங்களா?
மதுரையைத் தொடர்ந்து பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களில் இந்த தலைவர்கள் பேசி வருகின்றனர்... ஆனாலும் மதுரையில் வந்த கூட்டத்தைப் பார்த்தீர்களா? என்றுதான் பேசுகிறார்களே தவிர மற்ற ஊர்களில் அப்படி ஒன்றும் பேரெழுச்சியாக மக்கள் திரண்டு விடவில்லை.

திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் நகரில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேற்று பிரச்சாரம் செய்தனர். திண்டுக்கல், வேடசந்தூரில் வழக்கமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு வருவோரில் சற்றுதான் கூடுதலாக கூட்டம் கூடியிருந்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நான்கு சாலை சந்திப்பில் மேடை போடப்பட்டிருந்தது. 2 சாலைகளில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒரு சாலையில்தான் அதிகம் பேர் அமர்ந்திருந்தனர். வெள்ளை விநாயகர் கோவில் சாலையில் சொற்பமாகத்தான் அமர்ந்திருந்தனர்.
நிச்சயம் குறைவுதான்..
பிரமாண்ட பேரெழுச்சியான பொதுக்கூட்டம் என்று சொல்லும் அளவுக்கெல்லாம் திண்டுக்கல் கூட்டம் இல்லை... அதுவும் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் திண்டுக்கல் நகரில் இந்த கூட்டம் என்பது மிகக் குறைவானதுதான். அதுவும் 4 கட்சி தலைவர்கள் முழங்கும் மேடைக்கும் இந்த கூட்டம் நிச்சயம் படுகுறைவுதான்...
புதிய வாக்காளர்கள், இளம்வாக்காளர்கள் எங்களை நோக்கி சாரை சாரையாக வருகிறார்கள்... அத்தனை புதிய வாக்காளர்களும் ஒரே சிந்தனையோடு எங்களுக்கே வாக்களிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மேடையில் முழங்கினாலும் யதார்த்தம் என்னவோ அப்படி இல்லைதான் என்பதையே திண்டுக்கல் பொதுக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications