துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜகவின் வேட்பாளராக கடைசி நிமிடம் வரை இருந்தவர் கேரளா ஆளுநர் சதாசிவம்?
பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் கேரளா ஆளுநர் சதாசிவம் பெயர்தான் கடைசிவரை இருந்ததாகவும் திடீரென வெங்கையா நாயுடு பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் கடைசிநிமிடம் வரை கேரளா ஆளுநர் சதாசிவம் பெயர் இருந்ததாகவும் திடீரெனதான் வெங்கையா நாயுடு பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு டெல்லியில் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, தமக்கு துணை ஜனாதிபதியாவதில் விருப்பமே இல்லை.
மத்திய அமைச்சர் பதவிதான்..
மத்திய அமைச்சர் பதவியில்தான் தாம் நீடிக்க விரும்பினேன். கேரளா ஆளுநர் சதாசிவத்தின் பெயர்தான் கடைசிநிமிடம் வரை துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்தது. திடீரென அவர் மாற்றப்பட்டு என்னை நிறுத்துவதாக அமித்ஷா தெரிவித்தார் என கூறியுள்ளார்.
எதிர்பார்த்த சதாசிவம்
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் சதாசிவமும் தம்மையே துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தார். அவரது பெயர் அறிவிக்கப்படாததால் மிகவும் வருத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.
புதிராக இருக்கிறதே
சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, வெங்கையா நாயுடு கூறிய தகவலை சதாசிவத்திடம் தொலைபேசியில் பகிர்ந்திருக்கிறார். அப்போது, கடைசிநிமிடம் வரை வேட்பாளர் பட்டியலில் இருந்த என் பெயர் திடீரென மாறியதுதான் புதிராக இருக்கிறது என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
அமைச்சர்கள் விவாதம்
தமிழக அமைச்சர்களிடத்தில் இந்த தகவல்தான் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. கேரளா ஆளுநர் சதாசிவம் மூலமாகவே எடப்பாடி தரப்பு டெல்லி லாபிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.