கர்நாடகம் அப்பீல் செய்யத் தாமதித்தால் அதற்கு ஜெ. வே காரணம்.... கருணாநிதி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிடுமா என்பது பற்றியெல்லாம் இன்னும் சிந்திக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை பெற்றுள்ள ஜெயலலிதா, அத்தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அப்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அதற்கு அவர் கூறியதாவது :-
அதைப் பற்றியெல்லாம் இன்னும் சிந்திக்கவே இல்லை. தமிழக ஜனநாயகத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரிவிக்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை, தெரிந்து கொள்ளுகின்ற வாய்ப்பும் நமக்கு இல்லை' என்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதை கர்நாடக அரசு தாமதம் செய்து வருகிறதே?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ‘அப்படித் தாமதம் செய்து வருவது உண்மையானால், அதற்கு ஜெயலலிதாதான் காரணமாக இருக்கக் கூடும்' என கருணாநிதி பதிலளித்தார்.
அப்படியென்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.கழகம் மேல் முறையீடு செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘25-5-2015 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து, நன்கு யோசித்து, முடிவெடுத்து அறிவிக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications