திமுக 'பகுத்தறிவு' பதவியில் இருந்து மாற்றப்பட்ட (கேட்டு மாறிய) 'ஆழ்வார் ஆய்வு மைய' ஜெகத்ரட்சகன்!
சென்னை: தி.மு.க. பகுத்தறிவு பேரவை புரவலராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தற்போது அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் தி.மு.க.வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் புரவலராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெயர் இடம்பெற்றிருந்தது.
ஆனால் ஜெகத்ரட்சகனோ, தாம் ஏற்கெனவே ஆழ்வார் ஆய்வு மையத்தை நடத்தி வருகிறேன்; அத்துடன் மூச்சுக்கு முன்னூறு முறை நாராயணா! நாராயணா என்று சொல்வதும் வாடிக்கை.. இதனால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் ற்றம் செய்து தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜெகத்ரட்சகன், தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல்:
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் கூடுதலாக பொன் முத்துராமலிங்கம், எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொள்கை பரப்பு துணை செயலர்களாக குத்தாலம் க.அன்பழகன், பெருநற்கிள்ளியும் சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவராக ஆர்.டி. சீத்தாபதியும், உறுப்பினராக புதுக்கோட்டை சந்திரசேகரனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் அணி துணைச்செயலாளராக கொல்லாபுரம் ராஜேந்திரன்
மகளிர் அணி துணைச்செயலாளராக திருவாரூர் விஜயகுமாரி, மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளராக காயத்ரி சீனிவாசன், மகளிர் அணி பிரசார குழு செயலாளராக சேலம் சுஜாதா, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச்செயலாளராக ஜோன்ஸ் ரூசோ, வேலூர் நூருல்லா,
மருத்துவ அணி துணைச்செயலாளராக டாக்டர் அருண், ஆர்.டி.அரசு,வர்த்தக அணி தலைவராக எஸ்.என்.எம்.உபயதுல்லா,
வர்த்தக அணி துணைச்செயலாளர்களாக வி.பி.மணி, முகவை கிருபானந்தம், வேப்பூர் பெரியசாமி ஆகியோர் இடம்பெறுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.