சென்னை: விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை-பெற்றோர் கதறல்
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் சரஸ்வதி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நாகர்கோவிலை சேர்ந்த தனலெட்சுமி (22) என்ற இளம்பெண் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார்.
நேற்று தனலெட்சுமி இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியவில் நர்ஸ் சீருடையிலேயே மருத்துவமனை அறையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது பற்றி உடனடியாக சக நர்ஸ்கள் டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர் விரைந்து வந்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நர்ஸ் தனலெட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவில் தனலெட்சுமி தனக்குத் தானே ஊசியை எடுத்து போட்டு கொண்டு சாய்ந்து விழுவது பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனலெட்சுமி போட்டுக்கொண்ட ஊசி மருந்து இருதய ஆபரேசனின் போது இருதய கட்டுப்பாட்டுக்காக போடப்படும் ஊசி என்று தெரியவந்துள்ளது.
தனலெட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
தனலெட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சொந்த ஊர் நாகர்கோவில் வெட்டூர்னரிமடம் அருகில் உள்ள கட்டையன் விளை. தந்தை முருகன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மகள் இறந்த தகவலை அறிந்ததும் பெற்றோரும் உறவினர்களும் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
தாயார் கதறல்
மகள் இறந்த தகவல் அறிந்த அவரது தாயார் ராணி கதறி துடித்தார். எனது மகள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நேற்று இரவு 11 மணியளவில் என்னோடு செல்போனில் பேசினாள். அப்போது நன்றாக இருப்பதாக கூறினாள்.
நள்ளிரவு 2 மணியளவில் டாக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு என் மகள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். எங்கள் மகள் எப்படி இறந்தாள் என்றே புரியவில்லை என்றார்.
கடன் தொல்லையா?
ஏழைக்குடும்பத்தை சேர்ந்த தனலெட்சுமியின் வருமானத்தில் தான் குடும்பம் வாழ்ந்தது. இன்னும் சில மாதங்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மடிப்பாக்கம் பகுதியில் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாகவும் கடன் கொடுத்தவர் நேற்று நேரில் சென்று தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே கடன் பிரச்சனையால் தனலெட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.