ஆர்.கே.நகர்தான் முக்கியம்.. தலைநகரில் போராடும் விவசாயிகள் அப்புறம்.. ஓ.பி.எஸ், ஸ்டாலின் புறக்கணிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு களபணியாற்றும் ஓ.பன்னீர் செல்வமும், மு.க.ஸ்டாலினும் கடந்த 14 நாள்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளை இதுவரை சந்திக்கவே இல்லை.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் அணிகளாக , திமுகவா என்ற போட்டியில் டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்திக்காமல் உள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
பிரசாரம், வாக்குச் சேகரிப்பு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இரு அணிகளில் வெற்றி யாருக்கு என்று தீவிரமாக போராடி வருகின்றனர்.
சுயேச்சைகள்
தற்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், இரு அணிகளும் அதிமுக என்ற பெயரில் கட்சிக்கு வைத்துக் கொண்டாலும் சுயேச்சைகளாகவே கருதப்படுவர். இதனால் திமுக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கௌரவ பிரச்சினையில் உள்ளது.
ஆறுதல்
ஜல்லிக்கட்டுக்காக டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது தமிழக மக்களுக்கு சாப்ட் கார்னர் உள்ளது. இதனால் அவர் இங்கிருந்தே அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்திருந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
ரேஷன் கடைகளில் ஆர்ப்பாட்டம்
மு.க.ஸ்டாலினோ, ரேஷன் கடைகளுக்கு ஆய்வு மேற்கொண்டு ரேஷன் பொருள்கள் இல்லாததால் அந்தக் கடைகளின் முன்பு கடந்த 15 நாள்களுக்கு முன்பு திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு இருக்கையில் அந்த ரேஷன் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
முழு கவனமும் ஆர்.கே.நகரில்தான்
அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காத ஸ்டாலின், விவசாயிகள் பிரச்சினை குறித்து முரசொலியில் அறிக்கை விடுத்துள்ளேன். இப்போதாவது எனது கண்டனத்தை வெளியிடுங்கள் என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆக, ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் தற்போதைய முழு கவனம் ஆர்.கே.நகர் தேர்தலில்தான் உண்டு என்பதை நிரூபித்து விட்டனர். அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.