தலித் பூசாரி தற்கொலை விவகாரம்: நிதியமைச்சர் ஓ.பி.எஸ்.-ன் தம்பி ராஜா வீட்டில் ரெய்டு?
பெரியகுளம்: தலித் பூசாரி தற்கொலை வழக்கில் சிக்கி தனது பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிதியமைச்சர் ஓ.பி.எஸ்.-ன் சகோதரர் ராஜா வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். நாகமுத்து தலித் இனத்தைச் சேர்ந்தவர். பூசாரி நாகமுத்து கடைசியாக எழுதிய கடிதத்தில் ஓ.பி.எஸ். தம்பி ராஜாவின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இது தவிர அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜா மீது கூறப்பட்டது.
தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தனது பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. தலித் பூசாரியான நாகமுத்து தற்கொலை வழக்கில் நேற்று ராஜா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக காவல்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு பெரியகுளத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ். மற்றும் ராஜாவின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற போதும், பெரியகுளத்தில் இந்த ரெய்டு செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications