பாஜகவின் சாய்சாக பன்னீர்செல்வம் மாறியது எப்படி?
ஜெயலலிதா உயிர் பிரியப் போகிறது என்ற பரபரப்பான சூழலில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானது எப்படி?
சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி, உயிரிழந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் அம்மா குணம் அடைந்துவிட்டார் என்றும் மீண்டும் நிர்வாகப் பொறுப்பை ஏற்பார் என்றும் பல முறை அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் எந்த விதமான உறுதியான தகவலும் இல்லாமல் ஊடகங்களுக்கு சொல்லி வந்தனர்.
என்றாலும், அதிமுகவிற்குள் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டேதான் இருந்தது. அதுவும் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறார் என்ற தகவல் உறுதியானதும், இந்தக் கேள்விக்கான வேகம் அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கூடியது.
ஜெயலலிதாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு ஆட்சி பறிபோன போதெல்லாம் அவசர அவசரமாக ஓ.பன்னீர் செல்வத்தைதான் அதிமுக தலைமை முதல்வராக்கியது. அதனால் ஜெயலலிதா இறந்தால் அந்தப் பதவி பன்னீர்செல்வத்திற்குத்தான் என்று சிலர் கூறிய நிலையில், இந்த முறை அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதிமுகவில் ஜாதி சண்டை
தமிழக முதல்வர் பதவி தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள ஜாதிக்கு கிடைக்க வேண்டுமா அல்லது மேற்கு மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கும் ஜாதிக்கு கிடைக்க வேண்டுமா என்ற விவாதம் நேரடியாக எழுந்து அதிமுகவில் சண்டையாக மாறியது.

அதிமுகவில் பெரும்பான்மை எந்த ஜாதி
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவருடைய டாப் லிஸ்டில் இருந்தவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி. இந்த 5 பேரில் 3 பேர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பெரும்பான்மை ஜாதியினர். மற்ற இருவரும் தென் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பிட்ட பெரும்பான்மை ஜாதியினர். ஆக, மெஜாரிட்டியாக 3 பேர் இருக்கும் ஜாதிதான் அடுத்த முதல்வர் என்ற கோஷம் அதிமுக உள்ளே வலுவாக எழுந்தது.

ஏன் வேண்டாம் ஓ,பன்னீர் செல்வம்
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது மேற்கு மாவட்டத்தில் அதிமுக அதிக வெற்றியை பெற்றுள்ளதாலும், ஓ. பன்னீர் செல்வம் இருமுறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டார் என்பதாலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக மேற்கு மாவட்டத்துக்காரர்களால் எழுப்பப்பட்டது.

ஊதி பெருக்கிய பாஜக
கட்சிக்குள் இப்படி ஒரு ஜாதிச் சண்டை நடந்து கொண்டிருக்க, பாஜக இதில் பெரிய அளவில் ஈடுபட்டு பிரச்சனை ஊதி பெருக்கியது. பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாதங்களுக்கு கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தில் செல்வாக்கு சற்று அதிகம் என்பதால் மேற்கு மாவட்ட பெரும்பான்மை ஜாதியினரையே முதல்வராக்க வேண்டும் என்று பாஜக ஒரு ரோல் செய்தது. அந்த வகையில் பாஜக சிலரை கை காட்டி முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பாஜக நினைக்கும்படி நடந்துவிட்டால் தமிழ்நாட்டை அதிமுக பேனரில் பாஜக ஆளலாம் என்று ஒரு குறுக்குத் திட்டத்தை பாஜக போட்டது.

வேலைக்காகாத தம்பிதுரை
அந்த வகையில், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தம்பித்துரையை முதல்வராக்க பாஜக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தம்பித்துரை பெயருக்கு அழுத்தமான ஆதரவு அதிமுகவில் கிடைக்கவில்லை என்பதால், பாஜக பல்வேறு வகையில் தொடர்ந்து முயற்சி வந்தது. எல்லா வழிகளை முயற்சி செய்து பார்த்துவிட்ட பாஜக, கடைசியில் ஓ. பன்னீர் செல்வம் பக்கமே வந்து நின்றுவிட்டது.

அக்கா பேச்சை கேளுங்க
இப்படி ஒரே குழப்பம் நிலவி வந்த வேளையில்தான், ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவும் "இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே நீடிக்கட்டும். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டார். இதுவும் பாஜக நகர்த்திய காய்க்கு பக்க பலமாக ஆகிவிட்டது.

சிக்கலின்றி முதல்வரான பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்க, உயிர் எப்போதும் பிரியலாம் என்ற இக்கட்டான ஒரு சூழலில் சசிகலாவின் முடிவை அனைவரும் ஏற்றனர். இதன்பிறகே ஓ.பன்னீர் செல்வம் சிக்கலின்றி முதல்வர் பொறுப்பை ஏற்றார்.












Click it and Unblock the Notifications