ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஓபிஎஸ்தான்!- நடிகர் தீபன் பேட்டி
சென்னை: அதிமுகவுக்கு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்தான் என்று ஜானகி எம்ஜிஆரின் உறவினரும் நடிகருமான தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) கூறினார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

ஜானகி எம்ஜிஆர் உறவினரும் நடிகருமான தீபன் கூறுகையில், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் என்றைக்கும் அழியாது. இன்றைக்கு அவருடைய நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். வருகிற 17ம் தேதி புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பாரதபிரதமர் மோடி ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறோம். அண்ணா நூற்றாண்டு விழா நேரத்தில் மத்திய அரசு ஒரு காயின் ரிலீஸ் செய்தார்கள். அதைப்போலவே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக ஒரு காயின் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அந்த நல்ல செய்தி எப்போது வேண்டுமானாலும் வரும், நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஜெயலலிதா அம்மா இருந்தபோது விழாவை சிறப்பாக நடத்துகிறேன் என்று சொல்லியிருந்தார் அவர் இப்போது இல்லை. ஆனால், அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராகியிருக்கிறார். அவர் தலைமையில் இந்த விழாவை சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.

புரட்சித் தலைவருக்கு பிறகு எப்படி மக்கள் ஜெயலலிதா அம்மாவை ஏற்றுக் கொண்டார்களோ அதைப்போலவே அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருப்பதுபோல கட்சியையும் வழி நடத்தவேண்டும். அவருக்கு மட்டும்தான் அந்த திறமை இருக்கிறது. அவரோடு நாம் எல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications