"உங்க கையில தான் இருக்கு..” விடிந்தால் தீர்ப்பு.. உடனே சென்னைக்கு பறந்து வந்த ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!
சென்னை : அதிமுகவில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில் இன்று (மார்ச் 28) முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளிக்கவுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், "இந்த தீர்ப்பு உங்க கையில தான் இருக்கு" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது.
இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணியினரும் கையைப் பிசைந்து வரும் நிலையில், தேனியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
விடுவதாய் இல்லை போல..அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக ஓபிஎஸ் கோஷ்டி மேலும் 2 வழக்கு!
ஓபிஎஸ் அணி வழக்கு
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
காரசார வாதம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து ஒத்திவைக்கப்பட்ட பின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகள் வெளியிடக் கூடாது என்றும் மார்ச் 22ல் விசாரணை நடத்தி மார்ச் 24 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த மார்ச் 19ம் அன்று நீதிபதி தெரிவித்தார். அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏழு மணி நேரமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஏழு மணி நேரம்
ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கிவிட்டு, தனியாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது போட்டியே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகளை நீக்கினால் தானும் தேர்தலில் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இன்று காலை தீர்ப்பு
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு இன்று (மார்ச் 28) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்குகிறார். முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளியாவதால் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே தொடர்ந்து வரும் மோதலில், இன்று காலை பிறப்பிக்கப்படும் உத்தரவு முக்கியமான மைல்கல்லாகவோ, திருப்புமுனையாகவோ இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஓபிஎஸ் சொன்ன வார்த்தை
தீர்ப்பு இன்று காலை வெளியாகவிருக்கும் நிலையில், நேற்று இரவு தேனியில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தேதி குறித்து தீர்ப்பு வெளியாக உள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு "நீங்கள் தான் சொல்லவேண்டும்.. தீர்ப்பு உங்கள் கையில் தானே இருக்கிறது" என சிரித்தபடி கூறிவிட்டுச் சென்றார்.