"எல்லாம் நன்மைக்கே"..அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் நச் கமெண்ட்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குழு டெல்லியில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றிய கேள்விக்கு "எல்லாம் நன்மைக்கே" என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையிலும் பாஜகவுடன் கை கோர்த்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்; பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியது. அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாகவும் ஆலோசனை நடத்தினார். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை பாஜக ஏற்றுக் கொண்டதா? என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் கருத்து சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ஓ.பன்னீர்செல்வம்- சசிகலாவை நிச்சயமாக அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என டெல்லி பாஜக மேலிடத்திலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது; ஆனாலும் பாஜக மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு நெருக்கடியை தர முடியும் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறது. அப்படியே ஓபிஎஸ், சசிகலா அதிமுகவுக்குள் நுழைந்தால் நடைமுறையில் பல்வேறு அதிகார சிக்கல்கள் எழும் என்கிற விவரத்தையும் டெல்லிக்கு சுட்டிக்காட்டியிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.












Click it and Unblock the Notifications