பிப். 13ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை: 2014-15ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிப்ரவரி 13ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இதற்காக தமிழக சட்டசபை 13ம் தேதி காலை 10 மணி்க்குக் கூடுகிறது.
இந்த ஆண்டில் 2வது முறையாக சட்டசபை கூடவுள்ளது. ஜனவரி 30ம் தேதிதான் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.
பிப்ரவரி 13ம் தேதி இதற்காக சட்டசபை கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
இது 4வது பட்ஜெட்
அதிமுக அரசு தாக்கல் செய்யவுள்ள 4வது பட்ஜெட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ல் அதிமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபை செயலாளர் அறிவிப்பு
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை 13.2.14 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு 2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, சட்டசபைக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்பண மானியக் கோரிக்கைகள்
மேலும், 2013-14-ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை 20-ந் தேதியன்றும், 2014-15-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளை 21-ந் தேதியன்றும் சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக சட்டசபை செயலகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்ஸுக்கு 4வது பட்ஜெட்
நடப்பு அதிமுக அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்தான் பார்த்து வருகிறார். அந்த அடிப்படையில் நான்காவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
தேர்தல் வருவதால்...
லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், மக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று திர்பார்க்கப்படுகிறது.