கிணற்றை தானமாக கொடுக்க ஓ.பி.எஸ் தரப்பு சம்மதம்.. போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிலத்திலுள்ள கிணறுக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 18 சென்ட் பரப்பில் மூன்று பெரிய கிணறுகள் உள்ளன.
மழை பொய்த்த நிலையில், ஊர் பொதுக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனது. இதற்கு பன்னீர்செல்வம் வீட்டு கிணறுகள் முக்கிய காரணம் என்று ஊர் மக்கள் குற்றம் சாட்டியதோடு, அந்த கிணற்றை ஊர் மக்களுக்கு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விஷயம் விபரீதமாவதை தொடர்ந்து கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்களும்-பன்னீர்செல்வம் தரப்பும் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 சென்ட் நிலத்தை கிராமத்திற்கு தானமாக எழுதி வைக்க பன்னீர்செல்வம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
நாளை மறுநாளே பத்திரப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.