இடைத்தேர்தல் பொறுப்பாளராக பன்னீர்செல்வம் நியமனம்.. சசிகலா நடராஜன் காய் நகர்த்தலின் காரணம் இதுதான்
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வரின் இலாகாக்களை கவனிக்க விடாமல் செய்வதில் சசிகலா தரப்பு வெற்றியடைந்துள்ளது.
சென்னை: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது.
நிதி மற்றும் பணியாளர் நலன் சீர்த்திருத்தத்துறை அமைச்சரான பன்னீர்செல்வத்திடம், ஜெயலலிதா கவனித்து வந்த முக்கிய இலாகா அனைத்தும் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி ( ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ். அதிகாரிகள் ), உள்துறை போன்ற முக்கிய துறைகளை பன்னீர்செல்வம் கவனிக்க வேண்டிய சூழ்நிலையிலுள்ளார்.
அறிவிக்கப்படாத முதல்வர்
எனவே அறிவிக்கப்படாத முதல்வர் பன்னீர்செல்வம்தான். ஆனால், முதல்வர் என அவரை உணரச் செய்யாத அளவுக்கு நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. ஏனெனில், எந்த ஒரு ஆட்சி நடந்தாலும் அப்போது நடக்கும் இடைத்தேர்தல்களில் தேர்தல் பணிப்பொறுப்பாளர்களை அறிவிக்கின்ற ஆளும் கட்சித் தலைமை, பொது நிர்வாகத்தை கவனிக்கும் அமைச்சரை பொறுப்பாளர் பட்டியலில் சேர்க்காது. அந்த வகையில், தற்போது நடக்கும் இடைத்தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பட்டியலை ஆளும் கட்சி தயாரிக்கும் போது பொது நிர்வாகத்தை கவனிக்கும் பன்னீர்செல்வத்தை தவிர்த்து மற்றவர்களைத்தான் நியமித்திருக்க வேண்டும்.
முதல்வர் அந்தஸ்து வரக்கூடாதாம்
ஏனெனில் பொது நிர்வாகத்தை கவனிக்கும் பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் மிக அதிகம். ஆனால், அறிவிக்கப்படாத முதல்வராக பன்னீர் பார்க்கப்பட்டாலும் அவரை நிதியமைச்சராக மட்டுமே பார்க்கிறது சசிகலா தரப்பு. முதல்வர்க்குரிய அந்தஸ்து எந்த சூழலிலும் அவருக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலில் அவரை முதன்மைப்படுத்தியிருக்கிறார் சசிகலா. தேர்தலுக்கான பொறுப்பாளர்களுக்கு தலைமை பன்னீர்தானாம்.
தேர்தல் பொறுப்பு
ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை பயன்படுத்தி அதிமுகவினரை திமுக கொள்முதல் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பன்னீருக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி நிறைய சுமைகளை பன்னீருக்கு வழங்கி ஆட்சி ரீதியாக நீங்கள் கவனம் செலுத்த தேவையில்லை என்பதை உணர்த்துவதற்காகவே அவரை தேர்தல் பணியில் ஈடுபட வைத்திருக்கிறார் சசிகலா என்று கூறுகிறார்கள்.
பன்னீர்செல்வம் அதிருப்தி
சசிகலாவின் காய் நகர்த்தல்களால் பன்னீர்செல்வம் வட்டாரம் பரபரத்து கிடக்கிறது. பன்னீரிடமும் இந்த சிந்தனை இருப்பதாக சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.