சட்டசபையில் முதல்வர் இருக்கையில் அமராத ஓ.பி.எஸ்: நிதியமைச்சர் சேரில் அமர்ந்தார்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கை காலியாகவே உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் 04.12.2014 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை என 3 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பதவி இழந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு செல்லாமல் அமைச்சராக இருந்த போது உள்ள அறையிலேயே சென்று தனது அலுவல்களை மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சரவை கூட்டம் நடைபெறும் போதும், முக்கிய முடிவுகளில் கையெழுத்து போடும் போதும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்தே கையெழுத்து போடுகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்கே அமர்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலையில் கூடியதும், ஓ.பன்னீர் செல்வம் எங்கே அமர்வார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவர் நேராக நிதியமைச்சராக இருந்த போது அமர்ந்த இருக்கையிலே அமர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வராக இருந்த போது ஜெயலலிதா அமர்ந்த இருக்கை காலியாகவே உள்ளது.
எனவே பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவையிலும் முதல்வருக்கான இருக்கையில் அமராமலேயே முதல்வராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் தான் அமர வசதியான இருக்கை செய்து தரவில்லை என்று காரணம் கூறிவிட்டு சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications