சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம்
சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் வரிசையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு அடுத்த இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும், அவர் பதவியில் இல்லாத காலங்களிலும் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், சட்டசபையில் முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்ததில்லை.
இதனால் பினாமி முதல்வர் என்றும் இன்னும் பல்வேறு பெயர்களாலும் தமிழக எதிர்க்கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சனம் செய்தனர். இருப்பினும் முதல்வராக இருந்த போது அதைப் பொருட்படுத்தியது இல்லை ஓ.பன்னீர்செல்வம்.
இதனிடையே முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5- ம் தேதி காலமானதைத் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். மேலும் அவை முன்னவராக செங்கோட்டையன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றபட்டுள்ளது. அமைச்சர்கள் வரிசையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு அடுத்த இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.