ஜெ.வுக்காக வளர்த்து வந்த தாடியை தேனி கோவிலில் சாமி கும்பிட்டு எடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்!
தேனி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் தாடியுடன் வலம் வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது தாடியை எடுத்து விட்டார்.
தேனி - போடி சாலையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு இன்று வந்த பன்னீர் செல்வம் அங்கு சாமி கும்பிட்ட பின்னர் தனது தாடியை எடுத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்லாமல், பல்வேறு அமைச்சர்களும், அதிமுகவினரும், ஜெயலலிதா வெளியே வர வேண்டும் என்று வேண்டி முடி வளர்த்து வந்தனர். தாடியுடன் வலம் வந்தனர். ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தததும் பலர் மொட்டை போட்டனர். ஆனால் அமைச்சர்கள் மொட்டையெல்லாம் அடிக்கவில்லை. சிலர் தாடியை எடுத்து விட்டனர்.
ஆனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் தாடியுடன் வலம் வந்து கொண்டிருந்தார். விரதமும் இருந்து வந்தார். இந்த நிலையில் முதல்வரான பின்னர் முதல் முறையாக நேற்று பெரியகுளம் வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இன்று அவர் தேனி - போடி சாலையில் உள்ள காளியம்மன் கோவிலுக்குப் போனார்.
அங்கு அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். தனது விரதத்தையும் முடித்துக் கொண்டார். தாடியையும் எடுத்தார்.