ஆர்.கே.நகரில் தினகரனுக்கு, ஓ.பி.எஸ் டீம் சேலஞ்ச்.. வேட்பாளர் அறிவிப்பு எப்போது தெரியுமா?
மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், இன்னும் ஓரிரு நாட்களில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்போம் என கூறினார்.
சென்னை: கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி ஓரிரு நாளில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். அணி வேட்பாளரை அறிவிப்போம் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ் ஆதரவாளருமான, மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக (சசி கோஷ்டி) சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.
ஆர்.கே.நகரில் திமுக சார்பில் வழக்கறிஞர் மருதுகணேஷ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஓ.பன்னீர்செல்வம் டீம் யாரை வேட்பாளராக களமிறக்கப்போகிறது என்பதில்தான். ஏனெனில் உண்மையிலேயே தற்போது தினகரனை அதிகம் எதிர்ப்பது ஓ.பி.எஸ் டீம்தான்.

ஓரிரு நாட்களில்
இந்நிலையில், மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம் என கூறினார்.

பரபரப்பு
கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி இந்த முடிவை ஓரிரு நாளில் எடுக்க உள்ளதாக அவர் அறிவித்தார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தினகரனை எதிர்க்க சிறந்த வேட்பாளரை களமிறக்க ஓ.பி.எஸ் டீம் தீவிரமாக தேடி வருகிறது.

தினகரன் போட்டியிடுவதே தவறு
மேலும், மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அவரை அதிமுக வேட்பாளராக எப்படி அறிவிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே அதிமுக சார்பில் ஒருவேளை தினகரன் வெற்றி பெற்றாலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்க முடியாது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானால் அவரது வெற்றி செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications