அனிதாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக ஓபிசி பேரவை வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் தவறான நீட் தேர்வு கொள்கையால் உயிரிழந்த மாணவி அனிதாவின் இழப்பிற்கு எடப்பாடி அரசு பொறுப்பேற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலர் வீர வன்னியராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வீரவன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சார்ந்த கூலி தொழிலாளியான சண்முகத்தின் மகள் அனிதா, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றுள்ளார். அதன் மூலம் கட்-ஆப் மார்க் 196.75 வைத்திருந்தார்.
அவரது தந்தை திருச்சி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து, தனது மகளை டாக்டராக்க வேண்டும் என்ற கனவுடன் படிக்க வைத்துள்ளார்.அக்கனவே இன்று பாழாகியுள்ளது.
அவரது மகள் அனிதாவும் தந்தையின் கடின உழைப்பை கருத்திற்கொண்டு மருத்துவத்தை குறிக்கோளாக கொண்டு பயின்று அவர், எப்படியும் மருத்துவராகி விடுவேன் என்ற உயர்ந்த நோக்கத்தை கொண்டு தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் மத்திய நீட் தேர்வை மையமாக கொண்டு பல சிக்கல்களை கொண்டு வந்தது.
இதில் தமிழக அரசு விதிவிலக்கு கோரி நீதி மன்றத்தை நாடிய நிலையில், சாதுர்ய தன்மையுடனும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத எடப்பாடி தலைமையிலான அரசின் மெத்தன போக்கினால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கினை விசாரித்த நீதியரசர் கிருபாகரன் அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தலை தெளிவாக சுட்டிக்காட்டினார். இருப்பினும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் இதில் எதுவும் கூறமுடியாது என மாணவி அனிதாவின் வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் அறப்போராட்டத்தில் அவர் மனமுடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
இருப்பினும் மத்திய அரசு இந்த அனிதாவின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனிவரும் காலங்களில் செயல்பட வேண்டும்.
உரிய நேரத்தில், திறம்பட செயல்படாத எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட நிலையிலும் தனது மகளை நல்ல மதிப்பெண் பெற காரணமாக இருந்த அனிதாவின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.1 கோடியும், தமிழக அரசு ரூ.50 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு வீரவன்னியராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications