ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல: மறுக்கும் நடிகை சரிதா நாயர்!
கோவை: சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டு வரும் ஆபாச படங்களில் உள்ளது நான் அல்ல, அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என சோலார் பேனல் மோசடியில் சிக்கிய நடிகை சரிதா நாயர் தெரிவித்தார்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த சரிதா நாயர். இவருடன் இவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது சரிதா நாயர் ஆஜராகி வருகிறார். கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சரிதா நாயரின் ஆபாச படங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக கோவை வந்த சரிதா நாயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் உள்நோக்கத்தோடு தன்னை பற்றி ஆபாச வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்தே தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டிருந்தது.
துபாய், சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளில், ' சோலார் பேனல் வழக்கில் கேரளா முதலமைச்சர் உம்மன்சாண்டி, ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஏழு சட்டசபை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
அவ்வாறு தெரிவிக்காவிட்டால் தன்னை பற்றி சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர்கள் மிரட்டினர். அதன்படியே இந்த ஆபாச படங்கள் சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல. அது முழுக்க முழுக்க உருமாற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகள். வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்
இவ்வாறு சரிதா நாயர் கூறினார்.