நிர்வாகத்தில் முறைகேடு... குரோம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் உண்டியல்களுக்கு ‘சீல்’ வைப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் உண்டியல்களுக்கு இந்து அறநிலையத்துறையினர் சீல் வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை அப்பகுதி பா.ம.க. கவுன்சிலர் ஜே.எம்.சேகர் என்பவர் நிர்வகித்து வந்தார். கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அக்கோவிலை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தாம்பரம் செல்வ விநாயகர் கோவில் செயல் அலுவலர் க.ரவி என்பவர் அறநிலையத்துறை சார்பில் அந்தக் கோவிலின் தக்காராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால், இதற்கு கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிலில் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று காலை தாம்பரம் செல்வ விநாயகர் கோவில் செயல் அலுவலரும், முத்துமாரியம்மன் கோவில் தக்காருமான க.ரவி தலைமையில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் நிர்மலா, மோகன்ராஜ், ரமேஷ் உள்ளிட்டவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கிருந்த உண்டியல்களுக்கு ‘சீல்' வைத்தனர்.
இதனைக் கேள்விப் பட்டு அங்கு வந்த கோவில் நிர்வாகியான கவுன்சிலர் சேகர், "எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி உண்டியல்களுக்கு ‘சீல்' வைக்கலாம்" எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உண்டியல்களுக்கு சீல் வைத்து விட்டு அறநிலையத்துறையினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக செயல் அலுவலர் க.ரவி கூறுகையில், ‘முத்துமாரியம்மன் கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக ஜெயராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அறநிலையத்துறை, தக்காரை நியமித்து கோவிலை நிர்வகித்து வருகிறது. கோவிலில் குருக்கள் சம்பளம் வரை அறநிலையத்துறை கொடுத்து வருகிறது.
தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவையும் மீறி கோவில் உண்டியலை திறந்து கோவில் நிர்வாகிகள் பணம் எடுத்து உள்ளனர். ரசீது கொடுத்து பணம் வசூல் செய்து உள்ளனர். இதுபற்றி அறநிலையத்துறைக்கு வந்த புகாரின் பேரில் உண்டியல்கள் ‘சீல்' வைக்கப்பட்டு உள்ளது. ரசீது போட்டு வசூல் செய்வது இனியும் தொடர்ந்தால் போலீசில் புகார் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார்.