மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்... ஓடி வந்து திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்... மணமகள் ஷாக்...!
செங்கம்: செங்கத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததையடுத்து, நடைபெற இருந்த திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞருக்கும், புதுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும் நேற்று காலை செங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு உள்பட விருந்து, உபசரிப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. அந்தத் தொகுதி எம்எல்ஏவும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், அதனை மறைத்து இந்தத் திருமணத்தை அவர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் மருத்துவக் குழுவினர் மூலம் மணமகனை விசாரிக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களது தொலைபேசி இணைப்புகளை மணமகன் எடுக்கவில்லை. இதனால், எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் மணமகன் பெயர் இருப்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் ஆர்டிஓ உமாமகேஸ்வரி, தாசில்தார் காமராஜ், டிஎஸ்பி ஷாகிதா, அரசு டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனடியாக திருமண மண்டபத்துக்கு விரைந்தனர். அங்கு மணமகள் மற்றும் அவரது பெற்றோரைச் சந்தித்த அதிகாரிகள், மணமகனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணமகனிடம் இது குறித்து அவர்கள் விசாரித்தனர். அப்போது தனக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்ட மணமகன், அதற்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருமணத்தை உடனடியாக நிறுத்திய மணப்பெண்ணின் பெற்றோர், மண்டபத்தை காலி செய்து சோகத்துடன் சொந்த ஊர் திரும்பிச் சென்றனர். பின்னர் தங்கள் ஊரில் உறவினர் ஒருவரின் மகனுடன் உறவினர்கள், கிராமமக்கள் முன்னிலையில் அப்பெண்ணிற்கு திருமணம் நடந்தது.